ஆகஸ்ட் 6 இன்றுவெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை ஆண் காவலர் பணியிடங்களுக்கான 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு தொடங்கியது. இந்த பணிகளை ஐ.ஜி. பாஸ்கர், போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள 999 பெண்கள் உட்பட 4257 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆண்களுக்கு 1500 மீட்டர் ஓட்டம், உயரம் மற்றும் மார்பளவு ஆகிய உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற்றது. இதேபோன்று பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் சரிபார்க்கும் பணி ஆகிய உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற்றது. இதில் தேர்வாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்வாளர்கள் அனைவரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
இந்த நிலையில் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை ஆண் காவலர் பணியிடங்களுக்கான 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நேற்று காலை தொடங்கியது. அவர்களுக்கு 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த பணிகளை சென்னை ஐ.ஜி. பாஸ்கர், சென்னை டி.ஜி.பி. அலுவலக போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல் பெண்களுக்கான 2-ம் கட்ட உடல் தகுதித் தேர்வு வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. அவர்களுக்கு 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் பந்து எறிதல் ஆகிய உடல் தகுதித் தேர்வு நடக்கிறது.
No comments:
Post a Comment