நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தில் மரத்தில் கொடிக்கம்பம் அமைத்து, தேசியக் கொடியை ஏற்றி மலைக்கிராம மக்கள் மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பண்ணப்பட்டி என்னும் மலைக்கிராமம் உள்ளது. மின்சாரம், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த மலைக்கிராமத்தில் இருளர் இடத்தை சேர்ந்த 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு வசிக்கும் சிறுவர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என தங்களது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்ததையடுத்து, காட்டிலுள்ள மரத்தினால் கொடிக்கம்பத்தை உருவாக்கிய மக்கள், மூவர்ண கொடியை ஏற்றி கொண்டாட முடிவு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பசேகரன், பண்ணப்பட்டிக்கு நேரில் சென்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அவர்களின்குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். நகரங்களில் வசிக்கும் மக்களை போல் எந்தவிதமான வசதிகளும் இல்லாத நிலையிலும், மரத்தால் கொடிக்கம்பம் செய்து மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்திய மலைக்கிராம மக்கள், 5 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே வந்து தங்களுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மேலும் அனைத்து மக்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment